காலனிய காலத்தோடு நடந்தேறிய பண்பாட்டு மாற்றங்களில் பிரதானமானவொன்று சுதேசிய விளையாட்டுக்களின் தேய்வும் – அதனிடத்தை மேற்கத்தைய விளையாட்டுக்கள் இட்டு நிரப்பியமையுமாகும். இது விளையாட்டுக்களை மட்டுமின்றி அதன் நினைவுகளைக் கூட எங்கள் எண்ணங்களில் இருந்து பெரிதும் துடைத்தளித்து விட்டன. ஆங்காங்கு பாரம்பரியமாக தொடர்ந்த சிலவும், இன்றைய கல்வி உருவாக்கிய ‘படிப்பு’ எனும் பௌதீக – உளவியலின் சிக்கல்கள், அந்தப் படிப்புமுறை தோற்றுவித்துள்ள ‘நேரமின்மை’, இதன் பின்னணியில் மறுதலிக்கப்படும் ஓய்வு அல்லது பொழுதுபோக்குப் பண்பாடு அதன் சமூக – உளவியல் இன்றியமையாமை பற்றிய புரிதலின்மை அல்லது பொழுதுபோக்கை வெறுமனே தொலைக்காட்சிக்களுக்கு மட்டுமே எழுதிவைத்து விட்டிருக்கும் தன்மை ஆகியவற்றால் உருவாக்கப்படும் சமயகாலப் பண்பாட்டு நெருக்கடிக்குள் அகப்பட்டு அழிவனவற்றுள் பாரம்பரிய – சுதேசிய விளையாட்டுக்களும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.