வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விவசாயத்துறை விளங்குகின்றது. இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது.
நிலப்பாவனை என்ற வகையில் விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே காணப்படுகின்றது. வடமாகாணத்தில் 115,049 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், கிழக்கு மாகாணத்தில் 324,455 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் மொத்தமாக காலபோகம், சிறுபோகம் ஆகிய இரு போகங்களிலும் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது.
நெல் விவசாயத்தின் முதன்மைத் தன்மை காரணமாக இவ்விரு மாகாணங்களின் பிரதான செயற்பாட்டு வளங்களான நன்கு பயன் தரும் நிலங்களும் இருபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மனிதவளம், நீர் என்பனவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஏனைய துறை வளங்களான இயந்திரங்கள், நிதி ஆகிய வாழ்வாதார வளங்களும் பயன்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.