‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்” என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை எழுதும் நள்ளிரவில் எனக்குத் துயரத்தைத் தருகிறது. உண்மையில் இவ்விரண்டு பற்றியும் பேசக் கூடத் தகுதியல்லாத ஒரு நிகழ்கால நாடகத்தில் நாங்களும் எங்கள் அரசியற் தலைவர்கள் எனும் பெருங் கூட்டமும் பாத்திரங்களாய் உள்ளோம்.