அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய சுற்றுலா முறையாகும்.
உலகளாவிய ரீதியில் பல கரிய மையங்கள் இனங் காணப்பட்டுள்ளன. அதில் முதன்மையானவையாக நாசிவதை முகாம்கள், செர்நோபில் அணுநிலையம். ஹீரோசிமா முதலியன உட்பட 9/11 நினைவுச்சின்னம், கம்போடிய கொலைக் களங்கள் காணப்பட்டாலும், எவற்றை தெரிவு செய்வது அல்லது மூடிமறைப்பது முதலானவற்றின் பின்னால் உலகளாவிய அரசியல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும் இவ்விடத்தில் நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே அவற்றை நிர்ணயித்தல், செயற்படுத்தல் என்பதுவும் ஒரு தொடர் போராட்டம்தான்.
ஈழத்தமிழர்கள் மத்தியில் கறுப்புச் சுற்றுலா பற்றிய சிந்தனைகளும் – அதனை நோக்கிய செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன. அவர்களது தேசப்படம் இவ்வகைப்பட்ட பல படுகொலைகள், கல்லறைகள், நினைவுச் சின்னங்கள் அழிவுக் களங்கள், உடைப்புக்கள், வதை முகாம்கள், பயணப் பாதைகள், கைப்பற்றப்பட்ட கிராமங்கள், இழக்கப்பட்ட கட்டுமானங்கள் முதலான பல்வேறு கரிய மையங்களால் ஆகியுள்ளன. அவற்றை அடையாளப்படுத்தி இணைத்தொரு அழிப்பு வரலாற்றைக் கூறும் வரைபடமும் எடுத்துரைப்பும் தொகுப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்களிடம் பொதுவெளியில் இல்லை.
அழிப்பு வரலாற்று அருங்காட்சியகம், ஒளிப்படக் காப்பகம், ஆவணக்காப்பகம், நிலத்துண்டங்கள் சிறைகள், முகாம்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், கடற்பகுதிகள், கடற் தடுப்புக்கள், காவலரண்கள், முதலியவற்றை உள்ளடக்கி ஒரு சுற்றுலா வலைப்பின்னல் அமைய வேண்டும்.
#Blacktourism #Darktourism #Grieftourism #genocide #tamils #srilankantamils