உலக வரலாற்றின் ஒரு கட்டத்தில் உலகில் சாம்ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு ஜனநாயக அரசாங்கங்கள் உருவாகிய போதும் ஆண்டான்- அடிமைத் தன்மை முற்றிலும் ஒழிந்து போய் விடவில்லை . ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு சோரம் போனதேயன்றி அடிமட்ட விளிம்புநிலை மக்களை அது பாதுகாக்க எத்தனிக்கவில்லை.
இலங்கைப் பெருந்தோட்டத் துறையை பொறுத்தவரை ஒவ்வொரு தோட்டமும் ஒரு அதிகார அலகாக உருவாக்கப்பட்டிருந்தது. எங்கேயோ தொலை தூரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மிக கட்டுக்கோப்பான புவியியல் எல்லைகளைக் கொண்ட விசாலமான பெருந்தோட்டம் ஒன்றில் வாழவும் தொழில் செய்யவும் என குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் உள்நாட்டு மக்களுடன் பழகவோ, பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. இலங்கையின் பெருந்தோட்டங்கள் “பிரமிட்” முறையில் அமைந்து அதன் அதிகார உச்சாணிக்கொம்பில் பிரித்தானிய “பிளான்டர் ” அல்லது ” சுப்ரின்டென்ட்” ( Planter / Superintendent ) என்பவரே அமர்ந்திருந்தார். இவர் தமிழில் பெரியதுரை அல்லது எஜமான் எனவும் இவரது மனைவி துரைசாணி என்றும் அழைக்கப்பட்டனர்.
பெரிய துரையும் குடும்பத்தினரும் அந்தத் தோட்டத்திலேயே மிகப் பெரிய விசாலமான நன்கு காற்றோட்டமுள்ள ஆடம்பரமான மாளிகை போன்ற பங்களாவில் வாழ்ந்தனர். இந்த அதிகார பிரமிட்டின் அடிமட்டத்திலிருந்து மிதிபடுபவர்களாகவே தொழிலாளர்கள் இருந்தனர். கிடைக்கும் சொற்ப கூடலிக் காசுக்காக சொல்லொன்னா இன்னோரன்ன துன்ப துயரங்களை இவர்கள் எதிர்கொண்டார்கள்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம்