விபூதி, சந்தனம் , குங்குமம் என்பவற்றை மலிவான பொருட்கள் மூலம் உருவாக்குதனூடாக உள்ளூர் மரபுகள் அழிக்கப்படுவதோடு, சமயப் பயில்வுகளும் கேலிப் பொருளாக்கப்படுகின்றன. இந்தக் கேலியாக்குதலின் இன்றைய உச்சபட்ச நடவடிக்கைளில் ஒன்றை இதனோடு சேர்த்துக் கூறுதல் பொருத்தமானது என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கோவிலுக்காக எதனையாவது வாங்கப் போனால் ‘கோயிலுக்குத் தானே’ என்று கேட்டுவிட்டு தரங் குறைந்தவற்றைக் கோவிலுக்கானதாக முன்வைக்கின்றனர். உதாரணமாக, நெய்யை எடுத்துக் கொண்டால் – ‘சாப்பாட்டிற்கா? அல்லது பூசைக்கா?’ எனக் கேட்டுவிட்டுத் தரங் குறைந்தவற்றைக் கோயிலுக்கானதாகத் தருகின்றனர். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை முதல் விளைச்சல், உள்ளதிலேயே ஆகச் சிறந்தவற்றையே கோவில்களுக்குத் தருதல் என்ற நடைமுறையே இருந்தது. இந்த மனமாற்றங்களின் தொடர்ச்சியே கோவிற் பிரசாதங்களை வெறுமனே அசண்டையீனமாக கொள்ளுதலின் அடிப்படை போலத் தோன்றுகிறது.