கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 1918 இலும் பின்னர் 1970 ஆம் ஆண்டிலும் கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் அப்பகுதியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததைக் காட்டின. இதன் அடிப்படையில் ஏறத்தாழ 13 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடியேற்றங்களுக்கான தலைமை இடமாகக் கதிரமலை என அழைக்கப்பட்ட கந்தரோடை விளங்கியது என வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். உக்கிரசிங்கன் என்னும் அரசன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக யாழ்ப்பாண வைபவமாலையும் கூறுகின்றது.