கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண்டி அவர்களுடைய குடியிருப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் யாழ்ப்பாணத்துடன் போர்த்துக்கேயரின் தொடர்புகள் ஏற்பட்ட காலப் பகுதியிலிருந்து, அவர்கள் எழுதிய நூல்களில் இங்கே முஸ்லிம்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.